திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் நூல் குறித்து
திருவண்ணாமலைக்கு நான் முதன்முதலில் சென்றது 4 டிசம்பர் 2009இல். இயற்கை பாதுகாப்பு, இயற்கைக் கல்வி, மாற்றுக் கல்வி முதலிய செயல்பாடுகளில் ஈடுபட்டுவரும் ‘தி பாரஸ்ட் வே ட்ரஸ்ட் (The Forest Way Trust)’ அமைப்பின் கோவிந்தா, லீலா, சிவக்குமார், அருண் மற்றும் அவர்களது குழுவினரைச் சந்திக்கும் வாய்ப்பு அப்போதுதான் வாய்த்தது.
அருணகிரி பூங்காவில், அவர்கள் பராமரிக்கும் அந்தப் பகுதியில் இயற்கையாக வளரும் மரக்கன்றுகளின் நாற்றுப்பண்ணையைக் கண்டேன். திருவண்ணாமலை ‘சீசன்’ நேரத்தில் குறிப்பாக அங்கு வருவோர்களால் செயற்கையாகவும், விபத்தாகவும் ஏற்படும் தீயை அணைக்கும் தன்னார்வலர்களையும் அங்கு சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.
அந்தப் பூங்காவில் திருவண்ணாமலைப் பகுதியில் பொதுவாகத் தென்படும் பல பாலூட்டிகள், பறவைகள், வண்ணத்துப்பூச்சிகள், தாவரங்கள், மேலும் பல இயற்கையின் விந்தைகளை (அத்திப்பழத்தின் உள்ளே வாழும் அத்திக் குளவியின் வாழ்வியல் விளக்கும் ஓவியங்கள் போன்ற) கடப்பா கல்லில் வரையப்பட்டிருந்ததை வியப்புடன் பார்த்து ரசித்தேன்.
இவை அனைத்தும் இந்தக் குழுவில் ஒருவரான ஓவியரும், பறவை ஆர்வலருமான சிவக்குமார் தீட்டியவை. பின்னர், மாற்றுக் கல்வியை (Alternative Education) அடிப்படையாக வைத்து நடத்தப்பட்டு வரும் “மருதம் பண்ணைப் பள்ளிக்குச் (Marudam Farm School)” சென்றேன்.
அங்கு மரத்தின் மீது ஏறும், மண்ணில் விளையாடும், தான் சாப்பிட்ட தட்டை அரப்புத்தூள் கொண்டு தானே கழுவி வைக்கும் மாணவர்களையும் கண்டேன். அன்று கோவிந்தா, சிவக்குமாருடன் அப்பகுதியில் உள்ள பறவைகளைப் பார்த்ததும், ஒரு சிறிய குளத்தில் பல வகையான தட்டான்களையும், ஊசித்தட்டான்களையும் பார்த்து ரசித்ததும் இன்றும் நினைவில் உள்ளன.
திருவண்ணாமலை மாவட்டப் பறவைகள் பார்க்க செல்ல விரும்புவர்களுக்கு நிச்சயம் இந்த நூல் பயன்படும்.
Reviews
There are no reviews yet.